இன்று காலை திருச்சியில் ஈ.வெ.ரா பெரியார் சிலைமீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பு மாலை அணிவித்து அவ மரியாதை செய்திருந்தனர். இந்த அவமரியாதையை செய்தது யார் என்று விசாரணை நடந்துவருகிறது.
இதற்கிடையே, கனிமொழி எம்பி, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்பு பேசியதை சுட்டிக்காட்டி, இதுதான் பெரியாருக்கு நீங்கள் காட்டும் மரியாதையா என ட்வீட் செய்திருந்தார்.
திருச்சியில் #பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார்.
இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும்.. 1/2 pic.twitter.com/W1LkYtWJPW
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 27, 2020
கனிமொழியின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து எல்.முருகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ’’திருச்சியில் ஈ.வெ.ராவின் சிலைமீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல்துறை விரைவில் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைவரையும் அரவணைக்கும் புனிதமான காவியை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல.
ஆனால், அதேநேரத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஈ.வெ.ராவின் பிறந்தநாளன்று நான் கூறியதை மேற்கோள் காட்டி, இதுதான் அவருக்கு நீங்கள் காட்டும் மரியாதையா என்று கேட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் மிகுந்தது.
திருச்சியில் ஈ.வெ.ரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமரியாதை செய்த சம்பவத்திற்கும் , அதை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் திமுக விற்கும் எனது கண்டனங்கள்… pic.twitter.com/MOl2GV4IIy
— Dr.L.Murugan (@Murugan_TNBJP) September 27, 2020
காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, உள்நோக்கம் கற்பித்து அரசியல் ஆதாயம் தேடமுயற்சிக்கும் திமுகவின் வன்மமான அரசியல் உள்நோக்கம் கண்டிக்கத்தக்கது.
மேலும் விசாரணை நிலுவையில் இருக்கும்போதே இப்படி பேசியிருப்பது, இந்த செயல் திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. ஆகையால் கனிமொழியிடமும் விசாரித்து உண்மையை அறியவேண்டும், இந்த அநாகரீக செயலின் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM