டாடாவுக்கும் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையேயான நான்கு ஆண்டு சிக்கல்கள் முடிவுக்கு வரும் கட்டத்தில் இருக்கின்றன. டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் உள்ள 18.37% பங்குகளை விற்பதற்கு மிஸ்திரி முடிவெடுத்திருக்கிறார். யார் இந்த சைரஸ் மிஸ்திரி, டாடா குழுமத்திலிருந்து அவர் ஏன் வெளியேற நினைக்கிறார், மிஸ்திரி குடும்பத்தின் பின்னணி என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.
இரு பார்சி குடும்ப உறவு
டாடா குடும்பத்தினர் அனைவருமே பார்சி மதத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல, சைரஸ் மிஸ்திரியும் அவரின் முன்னோரும் பார்சி மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இரு பார்சி குடும்பத்துக்கு இடையேயான உறவு 70 ஆண்டுகளுக்கு மேலானது.
எஸ்பி குரூப் என்று அழைக்கப்படும் ஷபூர்ஜி பொலான்ஜி குரூப் (Shapoorji Pallonji Group) சைரஸ் மிஸ்திரியின் தாத்தாவால் உருவாக்கப்பட்டது. இவர்கள் மும்பையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டடம், தாஜ் மஹால் பேலஸ், ஓபராய் ஹோட்டல் உள்ளிட்ட முக்கியமானவை இந்த குழுமத்தால் கட்டப்பட்டவை ஆகும்.
1924-26 ஆண்டுக் காலத்தில் டாடா ஸ்டீல் மற்றும் டாடா குழும நிறுவனங்களுக்கு பிரம்சோஸ் எடுல்ஜி தின்ஷா (Framroze Edulji Dinshaw) என்னும் தொழிலதிபர் 2 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறார். இந்தக் கடனுக்கு ஈடாக 12.5% டாடா சன்ஸ் பங்குகளை தின்ஷா குடும்பம் பெற்றிருக்கிறது. இதற்கிடையே டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற ஜே.ஆர்.டி.டாடா, தன்னுடைய சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கு டாடா சன்ஸ் பங்குகளைப் பிரித்துக் கொடுத்தார்.
தின்ஷா குடும்பத்திடம் வாங்கிய 12.5% பங்குகளைத் தவிர்த்து, டாடா குடும்ப வாரிசுகளிடம் இருந்தும் பங்குகளை வாங்குகினார் ஷபூர்ஜி பலோன்ஜி. இதனால் டாடா சன்ஸில் 16.5 சதவிகிதத்துக்கும் மேலான பங்குகள் எஸ்.பி குரூப்பிடம் வருகிறது. 1990-களில் டாடா சன்ஸ் உரிமை பங்குகளை வெளியிட்டது. அப்போது 60 கோடி ரூபாயை முதலீடு செய்தது. இதனால் 18.37% பங்குகள் எஸ்பி குரூப் வசம் வந்தன.
குடும்ப உறவாக மாறிய பிசினஸ் உறவு
1975-ம் ஆண்டு ஷபூர்ஜி மறைந்த பிறகு, ஒட்டுமொத்த பங்குகளும் பலோன்ஜி மிஸ்திரி வசம் வருகிறது. இது இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தமாக மட்டுமல்லாமல் குடும்ப உறவாகவும் மாறுகிறது. பலோன்ஜியின் மகளான சைரஸ் மிஸ்திரியின் சகோதரி, நோயல் டாடாவைத் திருமணம் செய்துகொண்டார். பலோன்ஜி மிஸ்திரி டாடா சன்ஸ் இயக்குநர் குழுவிலும் இருந்துவந்தார். 2006-ம் ஆண்டு அவர் டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து விலகியவுடன், சைரஸ் மிஸ்திரி, டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இணைந்தார். அப்போது அவருக்கு வயது 38 மட்டுமே. டாடா குழுமத்தில் பல பொறுப்புகளைக் கையாண்ட சைரஸ் மிஸ்திரி 2011-ம் ஆண்டு துணைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
அடுத்து, டாடா சன்ஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவிலும் நியமனம் செய்யப்பட்டார். ஆனால், டாடா குழுமத்துக்கு வெளியிலிருந்து புதிதாக யாரையாவது தலைவராக ஆக்குவதைவிட டாடா குழுமத்தில் டாடா குடும்பத்துக்கு அடுத்தபடியாக அதிகளவில் பங்குகளை வைத்திருக்கும் சைரஸ் மிஸ்திரியே டாடா குழுமத்தின் தலைவராக்கினால் என்ன என்கிற யோசனை பிறக்கவே, 2012-ம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார். ஆனால், நான்கே ஆண்டுகளில் டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
நீக்கமும் சட்டப் போராட்டங்களும்
டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்பதற்கும், அதிரடியாக நீக்கப்படுவதற்கும் ஒரே காரணமாகச் சொல்லப்படுவது மிஸ்திரி வசம் இருக்கும் 18.37% பங்குகள்தான். 2016-ம் ஆண்டு அக்டோபரில் டாடா சன்ஸ் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு என்.சி.எல்.டியிடம் மிஸ்திரி முறையீடு செய்தார். ஆனால், அவருடைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். தீர்ப்பாயம், `மிஸ்திரியை நீக்கியது செல்லாது’ என அறிவித்தது. ஆனால், அவர் மீண்டும் தலைவராக விரும்பவில்லை.
ஆனால், டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இடம்பெற விரும்பினார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டாடா குழுமம், இந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. சட்டப் போராட்டங்கள் நீதிமன்றங்களில் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தில் மிஸ்திரி வசம் இருக்கும் பங்குகளை அடமானம் வைத்து ரூ.3,750 கோடியைத் திரட்ட மிஸ்திரி குழுமம் முடிவெடுத்தது.
Also Read: `அன்று நுசர்வன்ஜி கண்ட கனவுதான் இன்றைய டாடா!’ மாபெரும் சாம்ராஜ்யமாக டாடா எழுந்தது எப்படி?
இதற்காக புரூக்ஃபீல்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்த நிலையில், டாடா சன்ஸ் பங்குகளை அடமானத்தில் வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தொடுத்தது டாடா குழுமம். இந்த வழக்கில் அக்டோபர் 28-ம் தேதி வரையில் எந்த விதமான அடமான நடவடிக்கையும் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், டாடா குழுமத்தில் இருந்து வெளியேற இருப்பதாக நீதிமன்றத்தில் மிஸ்திரி குழுமம் தெரிவித்திருக்கிறது.