ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 9 சிக்ஸர்கள் விளாசி 74 ரன்கள் குவித்தார். சென்னையில் சாம் குரான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து, 217 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் முரளி விஜய் 21, வாட்சன் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாம் குரான் அதிரடியாக இரண்டு சிக்ஸர்கள் விளாசி 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கெயிக்வாட் டக் அவுட் ஆனார். ஜாதவ் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் டுபிளசிஸ் அதிரடி காட்டி சிக்ஸர்களாக பறக்க விட்டார். இருப்பினும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய தோனி சிங்கிள்களாக எடுத்து கடுப்பேற்றினார்.

டுபிளசிஸ் 72(37) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 36 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தோல்வி உறுதியான நிலையில், கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டார் தோனி. அதில் ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.