ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்தபோது டாம் குரான் டிப் கேட்ச் ஒன்று கொடுக்கப்பட்டு, பின்னர் இல்லை எனக் கூறப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களை விளாசினார். அத்துடன் 9 சிக்ஸர்களையும் அவர் விளாசியிருந்தார். அத்துடன் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 69 (47) ரன்கள் எடுத்திருந்தார். இறுதி நேரத்தில் களமிறங்கிய ஆர்ச்சர் 8 பந்துகளில் 4 சிக்ஸர் அடித்து 27 ரன்களை விளாசினார்.
இதற்கிடையே டாம் குரான் 9 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்த நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 18வது ஓவரின் 5வது பந்தை சாஹர் வீசினார். அந்தப் பந்து டாம் குரானின் பேட்டில் பட்டு, தோனியின் கைக்கு கேட்ச் போனது போல இருந்தது. அதை பிடித்த தோனியும், பந்துவீசிய சாஹரும் அவுட் கேட்டு அப்பீல் செய்தனர். இதையடுத்து இரண்டு நடுவர்கள் ஆலோசித்து டாம் குரானுக்கு விக்கெட்டை கொடுத்தனர். ராஜஸ்தான் அணியிடம் ரீவிவ் ஆப்ஷன் இல்லாததால் அவர்களால் ரிவீவ் கேட்க முடியவில்லை. ஆனால் 3வது அம்பயரை ஆலோசித்த நடுவர்கள், பந்து பேட்டில் படமால் காலில் கட்டியிருந்த பேடில் பட்டது என்பதை கண்டுபிடித்தனர். அத்துடன் அந்த பந்தை தோனி கீழே பட்ட பின்னர் பிடித்ததுபோலவும் இருந்தது. இதனால் மீண்டும் டாம் குரான் அவுட் ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் பேட்டிங் செய்யவந்தார்.
இதற்கிடையே அம்பயர்களிடம் சென்று கோபப்பட்ட தோனி முதலிலேயே 3வது நடுவரை சோதிக்காமல் ஏன் அவுட் கொடுத்தீர்கள் ? அவுட் கொடுத்த பின்னர் தற்போது எப்படி ரிவீவ் செய்தீர்கள் எனக் கேட்டார். இதை பலரும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக்கியுள்ளனர். சிலர் தோனி அவுட் இல்லாத விக்கெட்டைக் கேட்டு முறையிடுவதாக குற்றம்சாட்டுகின்றனர். சிலர் தோனி அப்படி செய்யவில்லை என்கின்றனர். ஆனால் தோனி அம்பயரின் முடிவுகளில் ஏற்பட்ட குழப்பத்தில் தான் கோபப்பட்டாரே தவிர, விக்கெட்டை திரும்பப்பெற்றதுக்கு கோபப்படவில்லை என்பதே உண்மை.