புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷார்மிக் சிறப்பு ரயிலில் பயணம் செய்தவர்களில் 97 பேர் இறந்ததாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சரின் தகவல் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்தியா முழுக்க கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து சொந்த ஊருக்குச் சென்றாவது உயிர்பிழைத்துக் கொள்ளலாம் என்று குடும்பத்துடன் கால் நடையாக சொந்த மாநிலங்களை நோக்கி படையெடுக்கத் துவங்கினர்.
(பியூஷ் கோயல்)
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து அனைத்தும் தடைப்பட்டுப் போயிருந்தன. மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு வாகன வசதிகளையும் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஊரடங்கு திடீரென்று அறிவிக்கப்பட்டதால், செய்வதறியாது சொந்த ஊர் நோக்கி நடந்தனர்.
பலர் குழந்தைகளை தூக்கிக்கொண்டும், சிலர் தங்கள் வயதான பெற்றோரை தோளில் தூக்கிக்கொண்டும், ஒரு சிறுமி உடல்நலமில்லாத தனது தந்தையை 1000 கிலோ மீட்டருக்குமேல் சைக்கிளிலேயே ஓட்டிச் சென்ற சம்பவம் போன்றவையெல்லாம் ஊடகங்களில் வெளியாகி பார்ப்பர்களுக்கு கண்ணீரை வர வைத்தது.
(டெரிக் ஓ பிரையன்)
இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்கள். வேறு வழி இல்லாமல் கடந்த மே மாதம் முதல் மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷார்மிக் சிறப்பு ரயில்களை இயக்கியது. ஆனால், வேலைவாய்ப்பு, வறுமை சூழலால் போக்குவரத்திற்கான டிக்கெட் கட்டணம் கட்டக்கூட முடியாத நிலையில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஷார்மிக் ரயில்களில் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல கட்டணம் நிர்ணயம் செய்தது மத்திய அரசு.
இதனால், கொதித்தெழுந்த சோனியா காந்தி புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணங்களை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சியே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஷார்மிக் ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்களில் 97 பேர் இறந்துள்ளதாக இன்று மாநிலங்களவையில் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின் விவாதத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் ‘ஷார்மிக் ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்களில் எத்தனை பேர் இறந்தார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். ஏனென்றால், ஊடகங்களில் 50 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்ததாக செய்தி வெளியாகி இருந்தது. அந்த அடிப்படையில் டெரிக் ஓ பிரையன் கேட்டிருந்தார்.
அதற்குதான், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இதுவரை 97 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார். இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் அந்தந்த மாநில காவல்துறையிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மேலும், ஷார்மிக் ரயிலில் பயணம் செய்யும்போது உணவு மற்றும் குடிநீர் கிடைக்கவில்லை என்று 113 பேர் புகார் அளித்துள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.