50 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 50,20,360-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,290 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்புகள், 82,066-ஆக அதிகரித்திருக்கின்றன.
இந்தியாவில் இதுவரை 39,42,361 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள். 9,95,933 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
அமெரிக்கா: இரண்டு லட்சத்தைக் கடந்த மொத்த உயிரிழப்புகள்!
உலக அளவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது. அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தற்போது வழங்கப்பட்டிருக்கும் தளர்வுகள் மேலும் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே காணப்படுகிறது. உலக அளவில், தினசரி ஏற்படும் பாதிப்பில் கடந்த சில நாள்களாகவே இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. நேற்று இந்தியாவில் மட்டும் 91,120 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்காவில் 36,447 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்திருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் 2,00,197 பேர் தொற்று பாதிப்பு காரணமாக பலியாகியிருக்கிறார்கள். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 67,88,147-ஆக உள்ளது.