நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வேலையிழப்புகள் குறித்த கேள்விகளுக்கு மத்திய அரசு தகவல் இல்லை என பதிலளித்தது.
கொரோனா பொதுமுடக்க காலத்திற்குப் பின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் என்பதால் மக்களவை கூடியதும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டான்டன், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, உத்தரப் பிரதேச அமைச்சர்கள் கமல் ரானி, தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி. வசந்தகுமார் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்களின் மவுன அஞ்சலிக்குப் பின் ஒரு மணி நேரம் மக்களவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூட்டப்பட்டது.
மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், நாட்டிற்காக பணியாற்ற வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். கொரோனாவுக்கு எந்த நாட்டில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்திய மக்களுக்கு அந்த மருந்து கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதற்கிடையே எதிர்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதன்படி, கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிந்தனர் ? என்று கேள்வி முன்வகைப்பட்டது. அதற்கு எழுத்து வடிவில் பதிலளித்திருந்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், ‘அதற்கான தகவல்கள் இல்லை’ என தெரிவித்திருந்தது.
அத்துடன் ஊரடங்கில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிவாரணம் தொடர்பான கேள்விக்கு, ‘முந்தைய கேள்வியை அடிப்படையாக கொண்ட கேள்வி என்பதன் அடிப்படையில் இது கணக்கில் எடுக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா தொற்று காலத்தில் வேலை இழந்தவர்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு, ‘தகவல் எதுவும் சேகரிக்கப்படவில்லை’ என பதிலளிக்கப்பட்டது.