தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தான் சுரங்கம் அமைத்து கொடுக்கிறது என தெரிவித்துள்ளார் காஷ்மீர் டி.ஜி.பி.
காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் கலார் கிராமத்தில் சர்வதேச எல்லையில் நிலத்துக்கு அடியில் கடந்த மாதம் 28-ந் தேதி ஒரு சுரங்கத்தை எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது.
170 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டப்பட்டு இருந்தது. அதன் ஆழம் 20 முதல் 25 அடிவரை இருந்தது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து தொடங்கி, இந்திய பகுதி வரை சுரங்கம் காணப்பட்டது. அதன் வழியாக பயங்கரவாதிகள் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில், காஷ்மீர் மாநில போலீஸ் டி.ஜி.பி. தில்பக் சிங் நேற்று அந்த சுரங்கத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
‘’இந்த சுரங்கப்பாதை, கடந்த 2013-2014 ஆண்டில், சான்யாரி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய சுரங்கப்பாதை போலவே இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் நக்ரோடா என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுதொடர்பாக நடந்த விசாரணையில், ஒரு சுரங்கம் வழியாக பயங்கரவாதிகள் வந்ததாக தெரிய வந்தது.
அது எங்கே இருக்கிறது என்று தேடி வந்தபோது, இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கத்தை பயன்படுத்தி, பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் பாகிஸ்தான் அனுப்பி வந்துள்ளது. இதுபோல் வேறு எங்காவது சுரங்கம் உள்ளதா என்று தேடி வருகிறோம்’’ என்று கூறினார் .