தனது மகள் ஐராவை பார்க்கமுடியாமல் தவிப்பதாக கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஏக்கம் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாட உள்ளார்.
தொடரில் விளையாடுவதற்கு ஆயத்தமாகும் வகையில் துபாயில் முகாமிட்டுள்ள சக அணி வீரர்களோடு இணைந்து அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது மகள் ஐராவை மிஸ் செய்வதாக ஷமி தெரிவித்துள்ளார்.
‘பண்ணை வீட்டில் பயிற்சி செய்து கொண்டிருந்ததால் ஊரடங்கு நாட்களில் நான் அவளை பார்க்கவே இல்லை. கிடுகிடுவென வளர்ந்து வரும் அவளை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன்.
கொரோனா தொற்றினால் கிரிக்கெட் காலத்திற்கே திரும்பாமல் இருந்த எங்களுக்கு ஐபிஎல் மூலம் கிடைத்திருக்கின்ற வாய்ப்பு, மிட்டாய் கடைகளை பார்த்தால் குஷியாகும் சுட்டிக் குழந்தைகளுக்கு கிடைத்த ஆனந்தமாக பார்க்கிறேன்.
பயிற்சி ஆட்டத்தில் எந்தவித பின்னடைவும் இல்லாமல் விளையாட முடிந்தது. எல்லோராலும் அவர்களது நேர்த்தியான ஆட்டத்தை எளிதில் மீட்டெடுக்க இது உதவியது.
மைதானத்திற்கு நேரில் வந்து எங்களுக்கு உற்சாகம் கொடுக்கும் ரசிகர்களையும் இந்த தொடரில் மிஸ் செய்கிறேன். கொரோனா சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்றாலும் இம்முறை நாங்கள் எங்கள் ஆட்டத்தின் மூலம் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்க உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
ஷமியின் மகள் ஐரா அவரது மனைவி ஹஸின் ஜஹானுடன் உள்ளார். வரும் 20ஆம் தேதியன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாட உள்ளது.