நாம் வாழும் பூமியானது சூரியக் குடும்பத்தில் ஒரு கோள் தான். விண்வெளியில் பல சூரியக் குடும்பங்களே உள்ளன என்கிறது அறிவியல். விண்வெளி என்பதே மிகப்பெரிய ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தை மனிதர்கள் முடிந்த அளவு ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவ்வப்போது பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக விண்கற்களும் பறந்து வருகின்றன.
இந்த விண்கற்களை சிறுகோள்கள் என்றும் கூறுகின்றனர். அப்படி ஒரு சிறுகோள் தற்போது பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் அளவில் பெரியது. கிட்டத்தட்ட இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களை சேர்த்தது போன்ற அளவுடையது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவில் பெரியது என்றாலும் இந்த விண்கல்லால் பூமிக்கு பாதிப்பில்லை. இது செப்டம்பர் 14ம் தேதியில் பூமியைக் கடந்து செல்லும் என தெரிவிக்கப்படுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், சிறுகோள் அளவில் பெரியது தான். ஆனால் இது பூமியில் மோத வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.
அதாவது விண்கல்லின் அளவு மற்றும் பூமிக்கு அருகாமையில் செல்லும் தூரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதன் அபாயத்தை நாசா கணக்கிடுகிறது. அதன்படி விண்கல் 2020 கியூஎல் 2 நாசாவால் “அபாயகரமானதாக” கருதப்படுகிறது. இருப்பினும், இது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் ஏதும் இல்லை.
சி.என்.இ.ஓ.எஸ் படி, 0.05 வானியல் அலகுகளுக்குள் (4.6 மில்லியன் மைல்கள்) வந்து 140 மீட்டர் (460 அடி) க்கும் அதிகமான விட்டம் கொண்ட விண்வெளி பொருள்கள் “அபாயகரமானவை” என்று பெயரிடப்பட்டுள்ளன. இதன் மூலம், விண்கல் 2020 கியூஎல் 2அபாயம் என கருதப்படுகிறது. இருப்பினும், அந்த விண்கல் பயணித்து வரும் பாதையை கருத்தில் கொண்டு, இது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்வதாகவும், அடுத்த 100 ஆண்டுகளில் விண்கல் மோதும் அச்சுறுத்தல் இல்லை என்றும் சமீபத்தில் நாசா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.