ரெய்னா இடத்தில் விளையாட சரியான வீரர் யார் என்பது குறித்து வெளிப்படுத்தியுள்ளார் ஷேன் வாட்சன்.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளது. இதனிடையே தனிப்பட்ட காரணங்களுக்காக, நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டிற்கான தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து நாடு திரும்பினார்.
இதையடுத்து ரெய்னா இடத்தில் யாரை சிஎஸ்கே இறக்கப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன், ‘அணியில் ரெய்னாவின் இடத்தை நிரப்புவது என்பது மிகக் கடினமான ஒன்றுதான்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வாட்சன் கூறுகையில், ‘’ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரெய்னா இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற ஸ்பின் பவுலிங்க்கு சாதகமான மைதானங்களில் அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மென் நிச்சயம் ஒவ்வொரு அணிக்கும் தேவை.
அந்த வகையில் தற்போது ரெய்னாவின் இழப்பை ஈடுகட்டும் விதமாக சிஎஸ்கே அணியில் முரளி விஜய் களம் இறங்கினால் சிறப்பாக இருக்கும்.
ஏனெனில் முரளி விஜய் சுழற்பந்து வீச்சுக்கும் சரி, வேகப்பந்து வீச்சிற்கும் சரி சிறப்பாக ஆடக்கூடியவர். அது மட்டுமின்றி அவருக்கு டி20 போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவம் உள்ளவர் என்பதால் நான் அவரையே ரெய்னாவின் இடத்திற்குபரிந்துரைக்கிறேன்’’ என்று கூறியுள்ளார் ஷேன் வாட்சன்.