மதுரையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் – சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் 13 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
மதுரை ஆனையூர் மல்லிகை நகர் பகுதியில் சிலர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது, காவல்துறையினர் வந்ததை கண்ட கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் தப்பியோட முயன்றுள்ளது,
அவர்களை சுற்றிவளைத்து பிடித்த காவல்துறையினர் கஞ்சா வியாபாரி பிரதீப் மற்றும் கண்ணன், சுதாகர் ஆகிய மூவரையும் கைது செய்து, சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர், மேலும் தப்பியோடிய 13 பேரை தேடிவரும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.