சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிறுவன் ஒருவரை அடித்துக் கொன்று பாழடைந்த வீட்டில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் இந்திராபுரி எனும் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் 19 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. சிறுவனின் உடலை மீட்ட போலீசார், இக்கொலை குறித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
கொலை செய்யப்பட்ட சிறுவனின் பெயர் சச்சின் என அடையாளம் காணப்பட்டது. கடந்த செப்டம்பர் 1 ம் தேதி இரவில் சச்சினுக்கும் அதூல் மற்றும் சூரஜ் உள்ளிட்ட 3 உள்ளூர் சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அதூல் மற்றும் சூரஜ் இருவரும் சேர்ந்து சச்சினை சரமாரியாக தாக்கியுள்ளனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சச்சின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சச்சினின் உடலை ஊருக்கு ஒதுங்குபுறமாக உள்ள கைவிடப்பட்ட வீட்டு ஒன்றில் மறைத்து வைத்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சச்சினை கற்களால் அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்ட அதூல் மற்றும் சூரஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் சிறுவர்கள் என்பதால் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளனர்.