நியூசிலாந்து நாட்டில் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று ஒரு நபர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக அந்நாட்டில் கொரோனா பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக உள்ளது.
நியூசிலாந்து 50 வயது நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஆக்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா இரண்டாவது அலையின் ஒரு பகுதியாக இந்த நபர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதிவரை நீட்டித்துள்ளார்.
மே 24 க்கு பிறகு நியூசிலாந்து தனது முதல் கொரோனா வைரஸ் மரணத்தை இப்போது பதிவுசெய்துள்ளது. கடந்த மாதம் ஆக்லாந்தில் புதிய தொற்று பதிவானது, இது நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு தோன்றும் தொற்றாகும்.
நியூசிலாந்து நாட்டில் இதுவரை 1764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 1630 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது.