இந்து முன்னணி பிரமுகர் வீட்டு முன்பு வீசப்பட்ட மர்மப்பொருள், வெடிகுண்டு அல்ல தேங்காய் கூடு என்பது விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையை சேர்ந்தவர் துரை. பால் வியாபாரியான இவர் சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்து வழக்கம்போல் பால் வியாபாரத்துக்கு செல்ல முயன்றார்.
அப்போது வீட்டின் முன்பு மர்ம பொருள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உருண்டையாக இருந்த அதில் நூல் மற்றும் திரி சுற்றப்பட்டு காணப்பட்டதால் அது வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இது குறித்து அவர் உடனடியாக போலீசார் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
சாத்தான்குளம் டிஎஸ்பி கிளாட்வின் ஜெகதீஷ் குமார், இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்து முன்னணி நிர்வாகிகளும் அங்கு கூடினர்.
போலீசார் மர்ம பொருளை பாதுகாப்பாக மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் நெல்லை, தூத்துக்குடியில் இருந்து வெடிகுண்டு தடுப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் மர்மப்பொருளை போலீசார் குடியிருப்புக்கு பின்புறம் எடுத்துச் சென்று சோதனை நடத்தினர். இதில் அந்த மர்ம பொருள் வெடிபொருள் இல்லை என்பது தெரிய வந்தது. சோதனையில், காய்ந்த தேங்காயில் நூல் சுற்றி திரி போல் வைத்திருந்தது தெரியவந்தது.