கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் கோவில்கள் மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை அறிவித்துவந்த தமிழக அரசு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வழிபாட்டுதலங்களை திறக்கலாம் என்றும் அதற்கான விதிமுறைகளையும் வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானம் பொதுமக்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்குள்ளாக பூஜைகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் 7.30 மணி முதல் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்களின் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுவதோடு சானிடைசரும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு மீட்டர் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோவிலில் தீர்த்தமோ பிரசாதமோ அளிக்கப்படாது எனவும் பூஜைக்காக பூ, தேங்காய் போன்றவற்றையும் பக்தர்கள் கொண்டு வர வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.