கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சானிடைசர் வைத்திருப்பது நல்லது. ஆனால் அதை காருக்குள் வைத்துச்செல்லும் முன்பு அது நன்கு மூடியிருக்கிறதா என்பதை சரிபார்த்துவிட்டு செல்லவும்.
புவனேஸ்வர் ருச்சிகா மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த கே. சஞ்சய் பத்ரா ஞாயிற்றுக்கிழமை அவரது மருந்துக்கடைக்கு அருகில் தனது காரை நிறுத்தி வைத்திருந்தார். மதியம் 2 மணியளவில் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிய சில நிமிடங்களில், அதாவது 100 மீட்டர் தூரத்துக்குள் கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. ஒடிசா தீயணைப்புப் படையைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் இந்த விபத்துக்கு பின்னால் இரண்டு சாத்தியக்கூறுகள் இருப்பதாக சந்தேகித்துள்ளனர். பத்ரா கடைக்கு செல்வதற்கு முன்பு சானிடைசரால் காரின் டேஷ்போர்டு, ஸ்டியரிங் மற்றும் இருக்கைகளை துடைத்து சுத்தப்படுத்தி இருக்கிறார். அதன்பிறகு அந்த பாட்டிலை நன்றாக மூடாமல் அப்படியே வைத்துச் சென்றிருக்கிறார். இதனால் சானிடைசர் ஆவியாகி காருக்கு உள்ளேயே சுழன்றுள்ளது. இது வெப்பத்தால் நீராவியாகி காரின் இயந்திரம் வரைக் கசிந்திருக்கலாம் என்கின்றனர். இதுதவிர ஒரு ஸ்ப்ரேயும் காருக்குள் வைத்திருந்திருக்கிறார்.
தொற்றுநோய் ஆரம்பித்ததிலிருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு சுத்தம் செய்திருக்கிறார். ஆனாலும் துடைத்த 5 மணிநேரத்திற்குப் பிறகு தீப்பிடிப்பது சாத்தியம் இல்லை என தீயணைப்பு நிபுணர் நிராகரித்தார். எனினும், திறந்திருக்கும் ஒரு சானிடைசர் ஆவியாகி, வெப்பத்தால் நீராவியாகி தீப்பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
வெவ்வேறு பிராண்டு சானிடைசர்களில் ஆல்கஹால் அளவுகள் மாறுபடும். பெரும்பாலும் 60 முதல் 80 சதவீதம் வரை இருக்கும். இவை 21 டிகிரி செல்ஷியஸ் மட்டும் தாங்கும். ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வரில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸ். இதுவும் தீவிபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகித்துள்ளனர். விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.