மதுரையில் நடந்துச் சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் சென்று தங்க செயினை பறித்த இளைஞர் 19 நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.
கொரானா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரை கிழக்கு வெளிவீதியில் ஆகஸ்டு 2ம் தேதி மைனா தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த உமா என்ற மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சைக்கிளில் வந்த இளைஞர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார்.
ஆனால் மூதாட்டி தங்கச் செயினை விடாமல் இழுத்து பிடித்துக் கொண்டதால் கோபமுற்ற வாலிபர் மூதாட்டியை கீழே தள்ளி அடித்து செயினை பறித்துச் சென்றார். இச்சம்பவம் குறித்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த மதுரை தெற்குவாசல் போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 15 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை காமராஜர் புரத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரை போலீசார் விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த அவர் மூதாட்டியிடம் நகை பறித்ததை ஒப்புக் கொண்டார். மேலும் இவர் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இதேபோல் சிறிய அளவிலான வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.