சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தமிழக கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “செவ்வாய் அன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் தோனிக்கு இரண்டாவது முறையாக நெகட்டிவ் வந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நாளை மதியம் 1.30 மணி அளவில் துபாய் செல்கின்றனர். 180 பேர் செல்லக்கூடிய விமானத்தில், சென்னை அணியை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 60 நபர்கள் செல்ல உள்ளனர்.
நேரடியாக அந்த விமானம் துபாய் சென்றடையும். அங்கு சென்னை அணிக்காண ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. துபாய் செல்ல உள்ள அணியை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டதில் அனைவருக்குமே நெகட்டிவ் என்று வந்துள்ளது. இன்று சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் இறுதி நாள் பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்” எனத் தெரிவித்தார்.