தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின் வீடு திரும்பியுள்ளார். இன்று(ஆகஸ்டு 15) முதல்வவருக்கும், துணை முதல்வருக்கும் இடையே காலை முதலே கட்சி விவகாரம் தொடர்பாக பல்வேறு குழப்பங்களும் அதனை தொடர்ந்து பல கட்ட ஆலோசனைகளும் நடந்து வந்தன. கட்சி தொடர்பான தனிப்பட்ட கருத்துகளை தலைமை அனுமதி இல்லாமல் யாரும் வெளியே பேசக்கூடாது. மீறி பேசினால் நடவடிக்கை உறுதி என்று இருவரும் கையெழுத்திட்டு கூட்டு அறிக்கை விட்டிருந்தனர்.
Also Read: #2021 CM FOR OPS: `கிராம மக்களின் சார்பாக..!’ – பரபரப்பு போஸ்டர்… பின்னணியில் யார்?
இந்த நிலையில், மாலை 6 மணியளவில் ராஜஅண்ணாமலை புரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து கார் கிளம்பியது. வாசலில் காத்திருந்த மீடியாக்களுக்கு ஆச்சரியம். ஒருவேளை, துணை முதல்வர் ஒ.பி.எஸ். வீட்டுக்குத்தான் போகிறாரோ? என்கிற எதிர்பார்ப்பில் முதல்வர் காரை பின்தொடர்ந்தனர். கார், நேராக தேனாம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவமனைக்கு சென்றது. மூன்று மணிநேரம் பல் சிகிச்சை நடந்தது. இரவு 9.10 மணிக்கு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தார் முதல்வர் எடப்பாடி. இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு என்ன சிகிச்சை நடந்தது என்று ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் பேசினோம்..
”முதல்வரின் வாயில் உள்ள மூன்று பற்களுக்கு பல் பதியம்(இன்பிளாண்ட்) சிகிச்சை நடந்தது. உடனடியாக ஸ்குரு போட்டு பற்களை பதியம் செய்ய மூன்று மணிநேரம் ஆனது. வெற்றிகரமாக சிகிச்சை முடிந்தது. நாளை முழு ஊரடங்கு நாள் என்பதால், முதல்வர் ரெஸ்ட் எடுப்பார். யாருடனும் பேசமாட்டார். டாக்டர் பாலாஜியே முன்னின்று சிகிச்சை செய்தார்” என்றார்கள். மருத்துவர்களுடன் பேச முயன்றபோது, அவர்கள் பேச மறுத்துவிட்டனர்.