2007 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் உடனான போட்டியின் பவுல் அவுட்டின் போது தோனி தன் கண் இமையைக் கூட அசைக்கவில்லை என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
தோனி தலைமையிலான இந்திய அணி 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரு அணிகளும் சம ஸ்கோரை எட்டியதால் பவுல் அவுட் முறையில் வெற்றி்த் தோல்வி தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு அணி வீரருக்கும் 5 வாய்ப்புகள் வழங்கப்படும். வீரர்கள் பவுலிங் செய்து ஸ்டம்ப்பை அடிக்க வேண்டும். அந்த முறையில் 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
அந்த பவுல் அவுட்டில் ராபின் உத்தப்பாவுக்கு வாய்ப்பளித்தார் தோனி. அந்த நினைவுகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் கணக்டெட் நிகழ்ச்சியில் பகிர்ந்துக்கொண்டார், அப்போது “தோனிக்கு மிகப்பெரிய தைரியம் அப்போது இருந்திருக்க வேண்டும். அந்த இளம் வயதில் ஒரு மிகப்பெரிய தொடருக்கு கேப்டனாக இருப்பது சாதாரண விஷயமல்ல. பவுல் அவுட்டின்போது தோனி பவுலர்கள் இல்லாதவர்கள் ஆனால் பவுலிங் செய்யக் கூடியவர்கள் யாராவது இருக்கிறீர்களா என கேட்டார்” என்றார்.
மேலும் “அப்படி தோனி கேட்டதும் உடனடியாக சென்று நான் பவுலிங் போட்டு ஸ்டம்புகளை வீழ்த்துகிறேன் என்றேன். பின்பு நான் பவுலிங் செய்து ஸ்டம்புகளை வீழ்த்தும் வரையில் தோனி கண் இமைகளை கூட அசைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார்” என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.