சென்னையில் குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டிலிருந்து 2 லட்சம் பணம் கிடைத்துள்ளது.
சென்னை ஓட்டேரி சத்தியவாணி முத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே உள்ள குடிசையில் ராஜேஸ்வரி (61 ) விஜய்அரசி (59) மகேஸ்வரி என்ற பார்வதி பிரபாவதி (57) ஆகிய மூன்று மூதாட்டிகள் வசித்து வந்தனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கி எடுத்து வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். இதில் பிரபாவதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் அழுகிய நிலையில் அங்குள்ள நடைபாதையில் இறந்து கிடந்தார்.தகவலறிந்த தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவரது உடலை மீட்டு காவலர்களின் உதவியுடன் அடக்கம் செய்தார்.
இந்நிலையில் அவருடைய சகோதரிகள் கடந்த சில நாட்களாக சாலையோரம் தங்கி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய தலைமை செயலக காலனி காவல் ஆய்வாளர், வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது வீடு இருந்தும் வீட்டில் தங்க இடம் இல்லை என்று மூதாட்டிகள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து காவலர்கள் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டினுள் குப்பைகள் குவியல் குவியலாக மூட்டையில் இருந்தன. இதனைத்தொடர்ந்து மாநாகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 15 லாரிகள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டன. குப்பைகளை அப்புறப்படுத்தும் போது அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பணம் இருந்ததும் அதில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சுமார் 40,000 வரை இருந்ததும் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது