சுஷாந்தின் காதலி என நினைத்து மும்பை நபரின் செல்போன் எண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் சென்றதால் அந்த நபர் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அவரது தற்கொலை தொடர்பான வழக்கை போலீஸ் விசாரித்து வருகிறது. இதேபோல், சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில், அவரது காதலியான ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலி ரியா, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், அவரது மேலாளர் சாமுவேல் மிரான்டா, ஸ்ருதி மோடி ஆகிய 6 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல், நம்பிக்கை மோசடி, திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் சுஷாந்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு குறித்து காண்பிக்கும்போது ரியாவின் செல்போன் எண்ணை அரைகுறையாக காண்பித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த நம்பரை பலரும் தொடர்புகொண்டுள்ளனர். இது மும்பையில் வசிக்கும் ஒருவருக்கு தொல்லையாகியுள்ளது. அதாவது ரியாவின் செல்போன் எண்ணுக்கும் அந்த மும்பை நபரின் செல்போன் எண்ணுக்கும் ஒரு நம்பர் தான் வித்தியாசம். இதனால் நூறுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் அவருக்கு வந்துள்ளன. தொடர் அழைப்புகளால் சோர்ந்து போன மும்பை நபர் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர், முதலில் பல மெசேஜ்கள் வந்தன. பின்னர் வாட்ஸ் அப்புக்கு வீடியோ கால்கள் வந்தன. அதுபோக தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பின்புதான் டிவியில் ரியாவின் எண் காண்பித்ததும், அவருடை எண்ணுக்கும் என் எண்ணுக்கும் ஒரு நம்பர் தான் வித்தியாசம் என்பதால் இந்த தொல்லை என்பதும் புரிந்தது என தெரிவித்துள்ளார்.