`ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்பது ஆன்றோர் வாக்கு. நாமாவளிப் பிரியரான முருகப்பெருமானை இசையோடு பாடி அழைத்தால் சகல சௌபாக்கியங்களும் வசமாகும். குறிப்பாக, ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஸித்திக்கும் என்கின்றனர் அடியார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடிக்கிருத்திகை நாளில் உங்கள் சக்தி விகடன் ‘ஆன்மிக மாலை’ வாயிலாக முருகப்பெருமானைக் கொண்டாடும் ஒரு அற்புத வைபவத்தை நடத்த உள்ளது.
கர்நாடக இசை உலகின் கம்பீர அடையாளமான இசைப்பேரொளி நித்யஸ்ரீ மகாதேவன், ஆடிக்கிருத்திகை அன்று ஆன்மிக மாலை வைபவத்தின் மூலம் நம் வாசகர்களைச் சந்திக்க இசைந்துள்ளார். 12.8.2020 அன்று மாலை 6 மணிக்கு நடக்க இருக்கும் ஆன்மிக மாலை நிகழ்ச்சியில் ‘இசையால் வசமாவான் இறைவன்’ என்ற தலைப்பில் தனது கம்பீர கந்தர்வக் குரலால் முருகப்பெருமானின் புகழைப் பாடி, ஆறுமுகன் தன் அடியார்களுக்கு அருளும் விதம் குறித்து சிறப்புரையாற்றவுள்ளார்.
இதயம் உருக இசையால் இறைவனை வணங்கினால் மட்டும் போதுமா…
அனலில் தோன்றி புனலில் மலர்ந்த அருள் பெரும் ஜோதியான முருகனுக்கு உகந்த குமாரதீப வழிபாட்டின் மகிமையை விளக்கி, வீட்டிலிருந்தபடியே நாம் வழிபடவும் வழிகாட்ட இருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர். சக்தி விகடனோடு இணைந்து வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்து அருள்வழிகாட்டிவரும் ஆன்மிக வள்ளலான சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர், தீப வழிபாட்டை விளக்கமாக வாசகர்களுக்குக் கற்றுத் தரவுள்ளார். முடிந்தவர்கள் அவரோடு தீபமேற்றி தீப ஜோதியால் திருமுருகனை வழிபடலாம்.
இசையால் முருகனை வேண்டினால் எண்ணியவை யாவும் இசையும். ‘செங்கதிரும் முழுமதியும், சேர்ந்தணிந்த சுந்தரனை, விண்ணகமும் மண்ணகமும், பார்த்து நிற்கும் அருளவனை… காணக் கண் ஆயிரம் வேண்டும்!’ என்று நித்யஸ்ரீ மகாதேவன் வியந்து பாடினால் கேட்கும் இதயம் எல்லாம் உருகும் அல்லவா… செவிக்கு இசையும் உரையும், இருவிழிக்கு தீபவழிபாட்டுத் திருக்காட்சி…
சிலிர்ப்பூட்டும் இத்தகைய நிகழ்வுகளோடு கொண்டாட இருக்கும் ஆடிக்கிருத்திகை வைபவத்தின் அற்புதத் தருணத்தில் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருள்பெற வாசகர்களாகிய உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.