ஆன்லைன் வகுப்பு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் குறித்து வழக்கறிஞர்கள் சரண்யா, விமல் கோகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த விதிமுறைகள் வகுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அனைத்து பள்ளிகளும் தமிழக அரசின் வழிமுறையை பின்பற்றும் என எதிர்பார்ப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்தது. எல்.கே.ஜி யூகேஜி வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது எனவும் இந்த வழக்கு குறித்த விசாரணையில் தனியார் பள்ளிகள், பெற்றோர் சங்கங்கள் பங்கேற்கும் வகையில் பத்திரிகையில் விளம்பரம் வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.