‘மாஸ்க் இல்லாமல் வெளியே போகாதீங்க; சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்’ என்று கொரோனா தொற்றுக்குள்ளான காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ராஜேஷ் குமார், கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
”நான் கொரோனாவிலிருந்து மீண்டுவர பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் கிள்ளியூர் தொகுதியின் பொதுமக்களான என் உடன்பிறவா சகோதர சகோதரிகள் மற்றும் என் மீது அக்கரையும் பாசமும் கொண்ட குமரி மாவட்ட மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் தோழமைகட்சிகள், எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள், நண்பர்கள் அனைவரையும் தலைவணங்கி நன்றியை காணிக்கையாக்குகிறேன்!
உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் ஊக்கமும் உள்ளவரை எனக்கு ஒன்றும் ஆகாது. எனது நோய்க்கான மாமருந்து நீங்கள் என் மீது வைத்திருக்கும் பாசமும் பிரார்த்தனையும் தான். எனவே நான் மீண்டு வருவேன்.
இப்போது நீங்கள் எனக்காக செய்ய வேண்டியது எல்லாம் முககவசம் (மாஸ்க்) இல்லாமல் வெளியே போகாதீங்க; சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்! வீட்டைவிட்டு வெளியே போய் திரும்பி வந்தால் சோப்பு போட்டு கைகளை கழுவிய பின்னரே வீட்டுக்குள் பிரவேசனம் செய்யுங்கள்!
உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் அவர்களையும் கொரோனா என்னும் கொடிய அரக்கனிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்! எனக்காக உங்கள் பிரார்த்தனை மட்டும் போதும்! என் உயிரை விட உங்கள் பாதுகாப்பே எனக்கு முக்கியம்! எனவே எனது வேண்டுகோளை நீங்கள் ஏற்று அதன்படி செயல்படுவீர்கள் என்கிற நம்பிக்கையில் எனக்காக பிராத்தித்து கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒருமுறை கூட சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.”
இவ்வாறு ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான சுரேஷ் ராஜனும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.