பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், 1965 போரில் பங்கேற்றவர் என்ற முறையில் இந்திய – சீன எல்லைப் பிரச்சினை பற்றி டெக்கான் ஹெரால்டு ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவர் தேவைப்படுவதாகவும், அதற்கு ராகுல்காந்தி பொருத்தமானவர் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் நியமிக்கப்படாமல் இருப்பது கட்சிப் பணிகளைப் பாதிக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமரீந்தர் சிங், “சோனியா காந்தி பகுதிநேரத் தலைவராக இருப்பதில் எந்த கேள்வியும் இல்லை. முன்னதாக அவர் கட்சியை வழிநடத்தியுள்ளார், ஆனால் நீண்டகால அடிப்படையில் பொறுப்பேற்க விரும்பவில்லை. இடைக்காலத் தலைவராக மட்டுமே இருப்பேன் என அவரே தெளிவுபடுத்தியுள்ளார். அதனால் எந்த விதத்திலும் கட்சிப் பணிகள் பாதிக்கப்படவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.
ராஜஸ்தானை சுட்டிக்காட்டி மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் தக்கவைக்க முடியவில்லையே என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போது புதிய தலைமை பற்றி குறிப்பிட்ட அவர், “காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு திரும்பவும் ராகுல்காந்தி வரவேண்டும் என்ற அழைப்புகள் வந்துள்ளன. ஆனால் அவர் இன்னும் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் செயற்குழுவின் ஒருமித்த கருத்தால் எடுக்கப்படும் முடிவு. ஆனால், ராகுல் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசியுள்ள அமரீந்தர் சிங், “இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். இளைய தலைமுறை பொறுப்புக்கு வரவேண்டும். காங்கிரசுக்கு ஒரு இளம் தலைவர் தேவை. அவரால்தான் பெரும்பான்மையான மக்களின் கனவுகளையும் தொலைநோக்குப் பார்வையையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவமுடியும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.