சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவியை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று பேசும் ‘மான் கி பாத்’ (மனதின் குரல்) மூலம் இன்று நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை லாரி ஓட்டுநர் நடராஜன் என்பவரின் மகள் கனிகாவிடம் தொலைபேசி மூலம் பேசினார்.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து மாணவி கனிகா சாதனை புரிந்ததை பிரதமர் குறிப்பிட்டார். ஏழை குடும்பத்தில் பிறந்து மருத்துவராக வரவேண்டும் என்ற கனவுடனும், லட்சியத்துடனும் கல்வி பயணத்தை தொடரும் கனிகாவுக்கு பிரதமர் வாழ்த்துக்களையும், பராட்டுகளையும் தெரிவித்தார்.
அத்துடன் ஏழை குடும்பத்தில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள், மிக நல்ல முறையில் நாட்டிற்கு சேவை ஆற்ற முடியும் என்றும் அவர் கூறினார். பிரதமர் வாழ்த்தியது தொடர்பாக கனிகா கூறும் போது, “பிரதமரிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை ஊக்குவிக்கும் வகையில் அவரின் பேச்சு அமைந்திருந்தது” என்றார். மேலும், மாணவியின் குடும்பமே பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.