ஆந்திர அரசு மருத்துவனையில் எட்டு மணி நேரம் காத்திருக்க வைத்ததால் தொழிலாளி ஒருவரின் உயிர் பரிதாபமாக போனதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனை வளாகத்திலேயே எட்டு மணி நேரம் காத்திருந்த 45 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவர் சிகிச்சையின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் மருத்துவமனை அலட்சியம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளியன்று, ஆந்திர மாநிலம் தர்மாவரம் பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர் அனந்தபூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தடியில் எட்டு மணி நேரம் காத்திருந்தும் அவரை சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து காலம் கரைந்துபோக உயிரும் பறிபோய்விட்டது.
அனந்தபூர் மருத்துவமனையில் அதிகாலை 3.30 மணிக்கு அங்குள்ள புற நோயாளிகள் ரிஜிஸ்டரில் தன் கணவர் பெயரைப் பதிவுசெய்தார் மனைவி கலாவதி. மருத்துவமனை ஊழியர்கள் அந்த ஏழைத் தம்பதியை கண்டுகொள்ளவே இல்லை. தர்மாவரத்தில் அனுமதிக்காமல்தான் அவர்கள் அனந்தபூர் வந்தார்கள். இங்கேயும் அதே நிலைமைதான்.
“மணிதான் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு டாக்டர்கூட உதவிக்கு வரவில்லை. நடு ரோட்டிலேயே என் கணவர் உயிரிழந்துவிட்டார். அனந்தபூர் மருத்துவனை ஊழியர்களின் கவனக்குறைவால் அவரை இழந்துவிட்டேன்” என்று கதறுகிறார் கலாவதி.
எட்டு மணி நேரமாக காத்திருந்தும் சிறு மருத்துவ உதவியைக் கூட மருத்துவமனையில் யாரும் செய்யவில்லை என்பது பெரும் அவலம். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த கட்டுமானத் தொழிலாளரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கத்தான் மருத்துவமனை ஊழியர்கள் வந்தார்கள்.