ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாகவே சென்று பயிற்சியை தொடங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மார்ச்சில் ஐபிஎல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தோனி, ரெய்னா போன்றவர்கள் சென்னைக்கு வந்து முன்னதாகவே பயிற்சியை தொடங்கினார்கள். ஆனால் கொரோனாவால் ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் அவர்கள் முன்னதாகவே செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகக் கோப்பை அரையிறுதியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனி இதுவரை களத்தில் இறங்கவே இல்லை. ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவார் என எதிர்பார்த்திருந்தபோது தான் கொரோனா குறுக்கிட்டது. அதேவேளையில் இந்த ஐபிஎல் தோனிக்கும் முக்கியமானதாகவே உள்ளது. தோனியின் எதிர்கால கிரிக்கெட் வாழ்வை கணிக்க இந்த ஐபிஎல்லையே பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நீண்ட இடைவெளி விட்டதால் முன்னதாக சென்று பயிற்சியை தொடங்குவதில் தோனி ஆர்வம் காட்டுவார் என்றே சொல்லப்படுகிறது.