தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புதிய முறையில் குழு பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்களிடம் குழு முறையிலான பரிசோதனை முறையை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறைச் சார்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின் படி கொரோனா பாதிப்பு 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், திருப்பூர், கரூர் நாமக்கல் உள்பட 21 மாவட்டங்களில் குழு முறையிலான சோதனை (pooled test ) செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல கொரோனாத் தடுப்பு முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கும், வெளிநாடு மற்றும் பிறமாநிலங்களில் இருந்து வந்த பயணிகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் குழு முறையிலான பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
குழு பரிசோதனை முறை எவ்வாறு செய்யப்படும் என்பதைப் பார்க்கலாம்?
குழு பரிசோதனை முறை என்பது 10 பேருடைய ரத்த மாதிரிகளை சேகரித்து, ஒரே முறையில் பரிசோதனை செய்வது. சோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லையெனில் அவர்களின் முடிவு ஒரே நேரத்தில் கிடைத்துவிடும். ஒரு வேளை தொற்று இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு தனித்தனியாக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படும். இதன் மூலம் அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
தொற்றைக் கண்டறிய வேண்டுமெனில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், குழு பரிசோதனை முறையை தமிழக சுகாதாரத் துறை எடுத்துள்ளது.