கோவை பேரூர் எம் ஆர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், இவரது மகள் ஐஸ்வர்யா (18 வயது). பேரூர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இவரை அதே பகுதியை சேர்ந்த ரதீஸ் (24 வயது)என்பவர் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர, இருவரும் கண்டிக்கப்பட்டனர். கடந்த மூன்று மாதங்களாக ஐஸ்வர்யா ரதீஸுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று மாலை ஐஸ்வர்யா வீட்டுக்கு சென்ற ரதீஸ், தன்னை மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு மாணவி மறுக்கவே, மறைத்து வைத்திருந்த கத்தியால், ஐஸ்வர்யாவை குத்தியதாக சொல்லப்படுகிறது.
வயிற்றில் நான்கு இடத்தில் கத்தியால் ரதீஸ் குத்த, அலறலைக் கேட்டு தடுக்க வந்த அவரது தந்தை சக்திவேலுக்கும் இரு கைகளில் கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா இன்று இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேரூர் காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரதீசை தேடி வருகின்றனர்.