காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செய்தியாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், முன் களப்பணியாளர்கள் ஆக பணிபுரிந்து வந்த காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், செய்தியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்தித்தாள் மற்றும் ஊடகத்தில் செய்தியாளராக பணிபுரிந்த ராமநாதன் கடந்த 4ஆம் தேதி கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நோய் தொற்று தீவிரம் காரணமாக மேல்சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்தார். இதேபோல் காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் பழனி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்தியாளர் ஒருவரும், காவல்துறையில் உதவி ஆய்வாளர் ஒருவரும் என இருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 55 ஆக உயர்ந்துள்ளது.