மருத்துவமனையில் உயிரிழந்த முதியவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச்சென்று உறவினர்கள் எரித்தனர். ஆனால் தற்போது இறந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம் 2 ஆம் தெருவை சேர்ந்தவர் நீதிபால்ராஜ். இவர் உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்துள்ளார். இவருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அதற்குள் மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள் முதியவரின் உடலை கேட்டு பிரச்னை செய்துள்ளனர். இதனால் மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தூத்துக்குடி மையவாடியில் எரியூட்டப்பட்டது. இந்த ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் உயிரிழந்து எரியூட்டப்பட்ட முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார் மையவாடியில் நேரில் விசாரணை மேற்கொண்டார். இதனிடையே உயிரிழந்த முதியவருக்கு தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.