கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தீவிரமாக பரவி வரும் நிலையிலும் முகக்கவசம் அணியாமல் இருந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை மாஸ்க் அணிந்தபடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
உலகளவில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கின்றனர்.
கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவை மட்டுமே தற்போது வரை மருத்துவர்களால் ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பொது இடங்களுக்கு வரும்போது மாஸ்க் அணியாமலேயே இருக்கிறார். இதனை பலரையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கிய நிலையில், கடந்த வாரம் விளக்கமளிக்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெய்லீ கூறும்போது, “மாஸ்க் அணிவது ட்ரம்ப்பின் தனிப்பட்ட விருப்பம். மாஸ்க் அணிவது, அணியாதது தனிநபரின் விருப்பம். மக்கள் அவர்களது பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிவதை ட்ரம்ப் ஆதரிக்கிறார். மேலும் அவர் மாஸ்க் அணிவதில் எந்தப் பிரச்சனையும் தனக்கு இல்லை என்று என்னிடம் கூறினார்” என்றார்.
இந்நிலையில் வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஒரு ராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களைச் சந்திக்க வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திற்கு சனிக்கிழமை வருகை தந்தார் ட்ரம்ப். அப்போது டிரம்ப் மாஸ்க் அணிந்து இருந்தார். மேலும் ட்ரம்ப் அமெரிக்கர்களை மாஸ்க் அணியும்படி கேட்டுக் கொண்டது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.