இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் சட்டென நினைவுக்கு வரும் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. தாதா என கொண்டாடப்படும் கங்குலி, இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஆக்ரோஷம் பீறிடும் ஆட்டத்தை களத்தில் வெளிப்படுத்தும் இந்த வங்கத்து புலிக்கு ரசிகர்கள் சூடிய செல்லப்பெயர் தான் தாதா. 300-க்கும் மேற்பட்ட ஒரு நாள் போட்டிகள், 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள். 50-க்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பெருமைக்குரியவர். சக வீரர்களால் அதிகம் மதிக்கப்பட்டவர், அதே அளவுக்கு வெறுக்கப்பட்டவர் என இருவேறு குணாதிசயங்களுடன் இருக்கிறது கங்குலியின் கிரிக்கெட் வரலாறு.
சச்சினுக்கு தொடக்க ஆட்டத்தில் தோள் கொடுத்தது, தலைமைப் பொறுப்பில் தனித்துவத்துடன் செயல்பட்டது என கங்குலியின் பங்களிப்பு மிளிர்கிறது. ஆஸ்திரேலியாவில் 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் கங்குலி. அந்தத் தொடரில் அவர் குறிப்பிடும்படியாக எதையும் சாதிக்கவில்லை. அதன்பின்னர் படிப்படியாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தி அவர் சாதிக்கத் தொடங்கினார். தொடக்க காலத்தில் ஒருநாள் போட்டிகளில் மத்திய வரிசை வீரராக களமிறங்கிய கங்குலி, பின்னர் தொடக்க வீரராக களமிறங்கி ஜொலித்தார்.
2005-ஆம் ஆண்டு அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பலுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், கங்குலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலக நேரிட்டது. அணியிலும் இடம் கிடைக்காமல் போனது. அதன் பின்னர் பல போராட்டங்களை கடந்து இந்திய அணியில் இடம்பிடித்தார் கங்குலி.
இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய கங்குலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2007ஆம் ஆண்டு மட்டும் 9 போட்டிகளில் விளையாடிய கங்குலி, 1024 ரன்கள் குவித்தார். அப்போது இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், “கங்குலி இவ்வளவு சிறப்பாக விளையாடி நான் பார்த்தே இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் முடிவில் கங்குலி தன் ஓய்வை அறிவித்தார். கங்குலியின் கடைசி போட்டிக்கு தோனி கேப்டனாக இருந்தார். ஆட்டத்தின் கடைசி சில நேரங்களுக்கு மட்டும் இந்திய அணியின் கேப்டனாக கங்குலியை அமர்த்தி அழகு பார்த்தார் தோனி. இதன் மூலம் தன்னை அறிமுகப்படுத்திய கேப்டனுக்கு தோனி, ஒரு சிறப்பான பிரியாவிடை கொடுத்தார். தோனியின் இந்தச் செயல் அனைவரையும் மனம் நெகிழ செய்தது
இத்தனை சிறப்பான கிரிக்கெட் வாழ்வில் கங்குலி தன்னை ஒவ்வொரு முறையும் சுவரின் மீது எறிந்த கல்லை போல் மிகவும் வலிமையாக திரும்பி வந்தார். இதனாலேயே ஓய்வு பெற்ற பிறகும் அவர் ரசிகர்கள் மனதில் சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். பயிற்சியாளராக, ஆலோசகராக, பிசிசிஐ நிர்வாகியாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக, வர்ணனையாளராக இந்திய கிரிக்கெட்டுக்கு சேவையாற்றிய கங்குலி. அதே சேவையை பிசிசிஐ தலைவராகவும் தற்போது தொடர்ந்து வருகிறார்
இயற்கை விவசாயி ஆக உருவெடுக்கும் தோனி : கிரிக்கெட் ஓய்வு குறித்தும் புதிய தகவல்..!