புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது பெண்மணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உரிய அனுமதியின்றி வரும் நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இ- பாஸ் பெற்று வரும் நபர்களை உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இன்று வரை மாவட்டம் முழுவதும் 252 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 79 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 169 பேர் ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தனர்.
(கோப்பு புகைப்படம்)
இந்நிலையில் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட கடியாபட்டியை சேர்ந்த 62 வயது பெண்மணி ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அம்மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. அந்த பெண்மணியின் கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் திருச்சி மாவட்டத்திற்கு சென்று வந்தபோது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதன் பின்புதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.