அரியவகை பறவையான ஹார்ன்பிலை வேட்டையாடி ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்ட இளைஞருக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் கருத்து கூறிவருகின்றனர். மேலும் இவரது செயலுக்காக 5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை சந்திக்க உள்ளதாகவும் கூறிவருகின்றனர்.
இந்தோனேசியாவில் உள்ள காட்டுப் பகுதியில் காணப்படும் பெரிய பறவை ஹார்ன்பில். மிக அழகான வண்ணங்கள் கொண்ட இந்தப் பறவை பார்ப்பதற்கே உற்சாகமாக இருக்கும். இந்த வகைப்பறவைகள் தமிழகத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. நீண்ட அலகு, மிகப் பிரமாண்டமான இறகு எனக் காட்சியளிக்கும் இந்த வகைப்பறவைகள் பழவகைகளை உண்டு வாழ்ந்து வருபவை.
இந்நிலையில், இந்தப் பறவையை வேட்டையாடியதற்காக இந்தோனேசியாவில் உள்ள வேட்டைக்காரர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய சுவார் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, வேட்டையில் ஈடுபட்ட அந்த இளைஞர் போபியன் சிக்ரோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்தான் வனப்பகுதியில் புகுந்து வேட்டையாடிய ஹார்ன்பில் பறவையை தூக்கிக் காட்டியபடி பெருமிதமாக ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “இந்தக் காட்டில் உடனடியாக நுழைந்து இந்தப் பறவை சுட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார். அவர் கையில் ஒரு வேட்டையாடப்பட்ட ஹார்ன்பில் பறவையை காட்சிப்படுத்தி இருந்தார் சிக்ரோ.
இந்தோனேசியாவில் பாதுகாக்கப்பட்ட 14 பறவைகள் பட்டியலில் ஒன்றாக ஹார்ன்பில் வகை பறவை உள்ளது. அதனைதான் சிக்ரோ கொன்றுள்ளார். மேலும் துப்பாக்கியுடன் அவர் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இந்தப் பறவைகள் பொதுவாக வடகிழக்கு இந்தியா மற்றும் பூட்டான் காடுகளிலும் தென்கிழக்கு ஆசிய பிரதான நிலப்பகுதியிலும் இந்தோனேசியாவிலுள்ள சுலவேசி பகுதியைத் தவிர கிரேட்டர் சுந்தாக்களிலும் காணப்படுகின்றன.
ஆக, ஹார்ன்பில் என்ற அரியவகை பறவையை வேட்டையாடியதற்காக குற்றவாளிகளுக்கு சுமார் 17,609 அமெரிக்க டாலர் வரை அபராதமும், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்று ஐடிஎன் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது என்றும், அந்த இளைஞரின் செயலைக் குறித்து எச்சரித்த நெட்டிசன்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.