நியூசிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆரம்பம் முதலே கொரோனாவை மிக எச்சரிக்கையுடன் கையாண்டது நியூசிலாந்து. அந்நாட்டில் கொரோனா பரவ ஆரம்பித்த உடன் அவ்வரசு கடுமையான ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியதுடன், எல்லைகளையும் மூட உத்தரவிட்டது. இதனால் அங்கு கொரோனா பரவும் வேகமானது குறைந்தது. முதற்கட்டமாக அங்கு 1528 நபர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 22 நபர்கள் உயிரிழந்தனர்.இதனைதொடர்ந்து தனது சீரிய நடவடிக்கைகள் மூலம் கடந்த ஜீன் மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறி சாதனை படைத்தது நியூசிலாந்து.
இதனிடையே அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட் கிளார்க் கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கு விதிகளை மீறி தனது குடும்பத்துடன் கடற்கரையில் 20 கிலோ மீட்டர் பயணம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து விதியை மீறி மலைப்பாதையில் பைக் ஓட்டியதாகவும் கிளார்க்கின் விமர்சனங்கள் மீது வைக்கப்பட்டன.
இதற்கெல்லாம் உச்சமாக இறக்கும் தருவாயில் இருந்த பெற்றோரைப் பார்ப்பதற்கு, தனிமைப்படுத்துதலில் இருந்த இரண்டு நபர்களை கொரோனா பரிசோதனை செய்யாமல் அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியேற அனுமதியளித்தது. அதன் பின்னர் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த வரம்பு மீறிய நடமுறைக்கும் கிளார்க்கின் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இப்படி ஆரம்பம் முதலே தனது நடவடிக்கைகளால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த கிளார்க் தற்போது அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா குறித்து அவர் கூறும் போது “ நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது எடுத்த அனைத்து முடிவுகளுக்கு நான் மட்டுமே பொறுப்பாவேன். நியுசிலாந்தில் சமூக பரவல் இருப்பதற்கான எந்தச் சான்றும் இல்லை. நான் எனது பணியில் தொடர்வது என்பது, அரசாங்கம் பெருந்தொற்றை அணுகும் முறையில் இருந்து விலகி நிற்கிறது” என்று கூறினார்.