ஹைதராபாத்தில் 35 வயது நிரம்பிய கொரோனா நோயாளி மருத்துவமனை நிர்வாகம் செய்த அலட்சியத்தால் உயிரிழக்க நேர்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா நோயாளி ஒருவர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள மார்பு சிகிச்சை தொடர்பான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்குச் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனையில் நடக்கும் குளறுபடியான நிர்வாகத்தால் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில் கவனக்குறைவு மற்றும் வென்டிலேட்டர் வசதி இல்லை என்றும் உறவினர் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே நோயாளிக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருந்ததாகவும், இதய பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அதன்பின்னர் அவர் இறந்துவிட்டதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு நோயாளி பகிர்ந்து கொண்டுள்ள அந்த வீடியோ வருத்தம் அளிக்கும்படி உள்ளது. அவர் ஒவ்வொருமுறை சுவாசிக்கும்போதும் போராடுவது பதிவாகியுள்ளது. அவர் தனது வென்டிலேட்டர் மூன்று மணி நேரம் அகற்றப்பட்டதாகவும் அதைப் பற்றிக் கேட்கப்பட்டபோது, மருத்துவமனை ஊழியர்கள் “உங்களுக்குத் தேவையான அளவு இருக்கிறது” எனக் கூறியுள்ளனர். இந்த வீடியோவில் பதிவாகியுள்ள கடைசி சில நொடியில், “அப்பா, பை.. பை” என்று அந்த இளைஞர் கூறுவதும் பதிவாகியுள்ளது.