உத்தரப் பிரதேச மாநிலத்தில் திறந்தவெளி கழிப்பிடத்திற்கு சென்ற போது ஏற்பட்ட பிரசவத்தில் பிறந்த சிசுவை வனவிலங்கு ஒன்று தூக்கிக் கொண்டு சென்ற துயரச் சம்பவம் நடந்தேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது ஆக்ரா மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஜோதாபுரா கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ஒரு கர்ப்பிணி கடந்த செவ்வாய் கிழமையன்று திறந்த வெளியில் காலைக் கடனை முடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவருக்கு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது. இவர் சென்ற இடம் வனப்பகுதியை ஒட்டியது எனத் தெரிகிறது. பிரவசத்தின் போது மயக்கமடைந்த அந்தப் பெண் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். ஆகவே அவருக்கு குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அந்தப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு விலங்கு ஒன்று சிசுவை தூக்கிச் சென்றுள்ளது.
”டைம்ஸ் ஆப் இந்தியா” வெளியிட்டுள்ள ஒரு செய்தியின்படி, அந்தப் பெண் பிரசவத்திற்குப் பிறகு சம்பல் பள்ளத்தாக்குகளுக்கு அருகே மயக்கமடைந்துள்ளார். பல மணி நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தேடத் தொடங்கியுள்ளனர். பின்னர், அந்தப் பெண் இரத்தம் வெளியேறி மயங்கிக் கிடந்ததைக் கண்டுள்ளனர். மேலும், விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் ஷில்பி எனத் தெரியவந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உறவினர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ஷில்பி, “நான் திறந்த வெளியில் காலைக்கடனை முடிக்க சென்றபோது எனக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே நான் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். பிரசவத்திற்குப் பிறகு நான் மயக்கமடைந்துவிட்டேன். இரண்டு மணி நேரம் கழித்து என் குடும்பத்தினர் என்னைக் கண்டுபிடித்தபோது என் குழந்தையை காணவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்தப் பெண்ணின் கணவர் சுனில் சவுகான், “கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அரசு அளிக்கும் பணத்தின் உதவியுடன் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆகவே, நான் நிதி உதவி பெற கிராமத் தலைவரிடம் சென்றேன். அப்போது, ஆதார் அட்டையில் உள்ள எனது முகவரியில் சிக்கல் இருப்பதாக அவர் என்னிடம் கூறினார். ஆகவே உதவி செய்ய மறுத்துவிட்டார். பின்னர், ஜோதாபுராவில் உள்ள எனது பூர்வீக சொத்து ஆவணங்களை அவருக்குக் காட்டினேன். இவை அனைத்தையும் மீறி, கழிப்பறை இன்னும் கட்டப்படவில்லை”என்று கூறியுள்ளார். இந்தப் பகுதி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த விபரீதம் – இளைஞர் கல்லால் அடித்து கொலை