தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 2,236 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அரசு மருத்துவமனையில் 29 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணை நோய் இல்லாமல் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்குட்பட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இன்று உயிரிழந்த 45 பேரில் சென்னையை சேர்ந்தோர் மட்டும் 28 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செங்கல்பட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நோய்கள் இல்லாத 40 வயது பெண் கோவிட் பாதிப்பால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார்
இதுவரை மொத்தம் 911 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், சென்னையில் மட்டும் 694 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.