பெரம்பலூர் அருகே தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ராணி (வயது 65). இவருடைய மகள் ராஜேஸ்வரி. இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த சங்கர் என்பவருடன் திருமணமாகி வசித்து வந்தார். ராஜேஸ்வரியின் கணவர் சங்கர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் ராஜேஸ்வரி தனது தாயுடன் தங்கியிருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் ராணியின் வீட்டிற்குச் சென்று பார்த்த அவரது உறவினர், தாய் – மகள் இருவரும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுதொடர்பாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகப் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
அவ்வாறு இருப்பின் தற்கொலைக்கான காரணம் என்ன ? அல்லது அவர்களை யாராவது தற்கொலைக்குத் தூண்டினார்களா ? இல்லை மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணமா ? என்ற வகையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அதேசமயம் தாய் – மகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.