கொரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் மருந்தாக அறியப்பட்டுள்ள டெக்ஸாமெதாசோன், வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு நல்ல பலனளிக்கிறது.
கொரோனா நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து நல்ல பலன்களைத் தருவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை அளிக்கப்பட்ட மருந்துகளில் டெக்ஸாமெதாசோன் மட்டுமே உயிரிழப்புகளைக் குறைத்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெக்ஸாமெதாசோன் மருந்துகள் எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடியவை. பிற நோயாளிகளுக்கு உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க இம்மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்ப்பு சக்தியை மீறி கொரோனா செயல்படும் போது உடலில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இம்மருந்து உபயோகப்படுத்தப்படுகிறது. கொரோனா தீவிரமடைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வெண்டிலேட்டர் தேவைப்படும் போது இம்மருந்து பயன்படுத்தப்படுகிறது.
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு டெக்ஸாமெதாசோன் வழங்கப்பட்டதை அடுத்து இறப்பு விகிதம் 40 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாகவோ, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுயமாகவோ டெக்ஸாமெதாசோனைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.