வெஸ்டன் கழிவறைகளில் நாம் பயன்படுத்தும்போது கொடுக்கும் நீரின் அழுத்தத்தால் கொரோனா தொற்று பரவலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 82,64,400 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்தப் பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்து 3,54,065 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வெஸ்டன் கழிவறையின் மூலமும் கொரோனா நோய்த் தொற்று பரவலாம் என சீனாவில் உள்ள யாங்ஜோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நோய்த் தொற்றுள்ள ஒருவரின் செரிமான மண்டலத்தில் உயிர்வாழும் வைரஸ் அவர் கழிக்கும் மலத்தில் வழியாக பரவலாம் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளதாக செய்தி நிறுவனம் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல் இதழில் ஒன்றில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கணினி மாதிரிகள் பயன்படுத்தி ஒரு கழிவறையில் நீர் மற்றும் காற்றின் ஓட்டம் அதன்மூலம் தெறிக்கும் நீர்த்துளிகள் சோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே அதனை விஞ்ஞானிகள் “டாய்லெட் ப்ளூம் ஏரோசல்” என்று குறிப்பிட்டுள்ளனர். வெஸ்டன் கழிவறைகளில் ஃப்ளஷ் செய்யும்போது அது ஒரு பெரிய கொந்தளிப்பை உருவாக்குகிறது. அதில் கண்களுக்குப் புலப்படாத மலத்தின் துகள்கள் காற்றில் வீசப்படுகின்றன. ஆகவே அவை சுவரில் ஒட்டிக் கொண்டு உயிர் வாழலாம். நோயாளியை அடுத்து கழிவறைக்குள் வருபவர் அந்தக் காற்றை சுவாசிக்க நேரலாம் என விளக்கப்பட்டுள்ளது. ஆகவே நீரை கழிவறையில் பாய்ச்சும்போது அதன் மூடியை சாத்திவிட்டு பின்பு நீரை செலுத்துவது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது. அதன்பின் கிருமி நாசினிகளைப் போட்டு சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்த வேண்டும் என்றும் யாங்ஜோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் ஜி-சியாங் வாங் கூறியுள்ளார்.