இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. கொரோனா காரணமாக இந்தியா வந்திருந்த தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியினரும் திரும்பிச் சென்றனர்.
இதனிடையே ஏற்கெனவே இம்மாதம் திட்டமிடப்பட்டிருந்த இலங்கை, ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தை பிசிசிஐ ரத்து செய்துவிட்டது. இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில் “இப்போதுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு இந்தியா ஏற்கெனவே திட்டமிட்டிருந்த இலங்கை மற்றும் ஜிம்பாப்வே நாட்டுச் சுற்றுப் பயணங்களை ரத்து செய்கிறோம்” என விளக்கப்பட்டிருந்தது. ஜூன் 24 முதல் இலங்கையில் 3 ஒருநாள் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளிலும் விளையாட இருந்தது. அதேபோல ஜிம்பாப்வேயுடன் ஆகஸ்ட் 22 முதல் திட்டமிடப்பட்டிருந்தது. அவை இந்த அறிவிப்பின் மூலம் ரத்தானது. அனைத்து கிரிக்கெட் விளையாட்டுகளும் ரத்தாகிப் போனாதால் ரசிகர்கள் மிகவும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் மருத்துவராக மது தொட்டபிளில் உள்ளார். மேலும் விளையாட்டு சார்ந்த மருத்துவ நிபுணராகவும் உள்ளார். சர்ச்சைக்குரிய விதத்தில் மது தொட்டபிளில் தனது ட்விட்டர் பக்கத்தில், 20 இந்திய ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் உயிர் நீத்துள்ள சூழலில் அது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார்
அந்தப் பதிவு தவறான கருத்தை வெளிப்படுத்துவதாகவும், அதன் காரணமாக அணியின் மருத்துவர் பொறுப்பில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் இல்லாததால் தவித்த சிஎஸ்கே ஊழியர் – ரூ25 ஆயிரம் கொடுத்து உதவிய இர்ஃபான் பதான்