ஜூலை இறுதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் கொரோனா நோயாளிகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் 266,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் தலைநகரமான டெல்லியில் இதுவரை 30,000 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, “ஜூலை இறுதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் கொரோனா நோயாளிகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இடமளிக்க 80,000 படுக்கைகள் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “”ஜூன் 15 வரை, 44,000 கொரோனா நோயாளிகள் இருப்பார்கள். ஆகவே எங்களுக்கு 6,600 படுக்கைகள் தேவைப்படும். ஜூன் 30க்குள் 15,000 படுக்கைகள் தேவைப்படும்.
டெல்லி அமைச்சரவை நகரவாசிகளுக்கு மட்டுமே படுக்கைகளை ஒதுக்க முடிவு செய்ததற்கு இதுவே முக்கிய காரணம். ஆனால் அது துணைநிலை ஆளுநர் மூலம் முறியடிக்கப்பட்டது. இப்போது, நோயாளிகள் அதிகரித்து, படுக்கைகள் நிரம்பியிருந்தால் அதற்கு யார் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள்? ” என்று அவர் கேள்வி எழுப்பினார்.