இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் மட்டும் ஜாதி, மதம் கடந்து அனைவரும் ரசிக்கும் ஓர் விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது. இங்கு கிரிக்கெட் என்பது வெறும் ஒரு விளையாட்டல்ல, அது மதமாகவே பார்க்கப்படுகிறது. முன்பொருமுறை ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன், இந்தியச் சுற்றுப் பயணத்துக்குப் பின்பு அளித்த பேட்டியில் “இந்தியாவில் கிரிக்கெட் என்பது மதம். அதன் கடவுள் சச்சின்” எனக் குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால் இந்தியாவில்தான் ரசிகர்கள் கிரிக்கெட்டை மிகத்தீவிரமாக “பின் தொடர்கிறார்கள்.

image

இந்திய கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், கங்குலி, தோனி, கோலி ஆகியோரை அந்தந்த காலகட்டத்திற்கான இளைஞர்கள் தங்களின் இன்ஸ்பிரேஷனாக எடுத்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இதில் மிக முக்கியமாக அந்தந்த வீரர்களின் கருத்தை மிகத்தீவிரமாக அவர்களது ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். ஆகையால் தான் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் தங்களது வார்த்தைகளை மிகவும் கவனமாக உபயோகப்படுத்துவார்கள். பெரும்பாலும் அந்த வார்த்தைகள் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவே அமையும்படி பார்த்துக் கொள்வார்கள்.

image

ஆனால் இப்போது சமூக வலைத்தளம் பெருகிவிட்டதால் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு மனதில் பட்டதைப் பேசிவிடுகிறார்கள். அதனால் சர்ச்சையும் ஏற்பட்டுவிடுகிறது. அண்மையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவுடன் இன்ஸ்டாகிராமில் நேரலையாக உரையாடினார் முன்னாள் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். அப்போது சுழற்பந்துவீச்சாளர் சாஹல் குறித்து அவர் கூறிய சில கருத்துகள் சாதிய ரீதியாக இருந்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து ஹரியானா மாவட்டத்தின் ஹிசார் நகர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் யுவராஜ் சிங் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

image

இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங் இவ்விவகாரம் குறித்து விளக்கமளித்தார். அப்போது அதில் ” “நான் ஒருபோதும் இந்த நாட்டு மக்களிடையே சாதி, நிறம், பாலின பாகுபாடுகளுடன் பழகியதில்லை. நான் என்னுடைய வாழ்நாளை மக்கள் நலனுக்காகவே செலவிட விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது அதனை நான் மிகவும் மதிக்கிறேன். நான் என்னுடைய நண்பரிடம் பேசியபோது அது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் மிகவும் புனிதமானது” எனத் தெரிவித்திருந்தார்.

image

யுவராஜ் சிங்கின் விளக்கத்தை வைத்துப் பார்க்கும்போது அவர் ஒருபோதும் சாஹலை வேண்டுமென்று சாதிய ரீதியில் பேசவில்லை என கூறுவதுபோல் தெரிகிறது. ஆனால் கிரிக்கெட் வீரர்களிடையே சாதிய பாகுபாடு இருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. தமிழில் கிரிக்கெட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கிய “ஜீவா” படத்தில் கூட வீரர்களைத் தேர்வு செய்வதில் சாதிய பாகுபாடு இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஒருபோதும் வீரர்களிடையே அத்தகைய பாகுபாடு கிடையாது என்றே கூறப்படுகிறது.

image

இது குறித்து தமிழகத்திலுள்ள கிரிக்கெட் துறை சார்ந்த ஒருவர் கூறும்போது “யுவராஜ் சிங் சாதிய பாகுபாட்டுடன் சாஹலை பேசியிருக்கமாட்டார் என நினைக்கிறேன். நண்பர்கள் இருவர்களுடனான உரையாடலில் விளையாட்டாக வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இந்திய அணியில் வீரர்களிடையே ஒருபோதும் சாதிய பாகுபாடு இருந்து நான் பார்த்ததேயில்லை. அதேபோல மதப் பாகுபாடும். மொழிச் சிக்கல்கள் வீரர்களிடையே உரையாடும்போது ஏற்படும். அதுவும் போகப்போகச் சரியாகிவிடும். பொதுவாக இந்திய வீரர்களிடையே இதுபோன்ற சாதிய துவேஷங்கள் இருந்ததில்லை” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.