ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பையை நடத்தியே ஆக வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் எழுதியிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
டி20 உலகக் கோப்பை போட்டி இந்தாண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக உலகக் கோப்பை தொடரை ஐசிசி 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. இத்தகைய செய்தியால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெரும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் குறித்த முடிவை ஐசிசியின் நிர்வாகக் குழு இன்று நடைபெற இருக்கும் கூட்டத்தில் எடுக்க இருக்கிறது.
இது குறித்து நேற்று ஐசிசி வெளியிட்ட அறிக்கையில் “இந்தாண்டு டி20 உலகக் கோப்பை குறித்து வெளியாகும் செய்திகள் ஏதும் உண்மையில்லை. 2022 ஆம் ஆண்டுக்குப் போட்டி ஒத்திவைக்கப்படுவதும் உண்மையில்லை. இப்போதுள்ள சூழலை ஆராய்ந்து போட்டி திட்டமிட்டபடி நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து “டைம்ஸ் ஆஃப் இந்தியா” நாளிதழ் வெளியிட்ட செய்தியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு இப்போது இல்லை. இங்கு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தாண்டு இல்லையென்றாலும் அடுத்தாண்டு ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை நடத்த வேண்டும், 2022 டி20 உலகக் கோப்பையை வேண்டுமானால் இந்தியா நடத்திக்கொள்ளட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.