கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தமிழக அரசு செலவினங்களைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்த புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 776 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6282 உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை மொத்தம் 94 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.சென்னையில் மட்டும் இன்று 567 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 20 சதவீதம் செலவுகளைக் குறைக்கும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது. அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலைத் தவிர்க்க வேண்டும். நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி. மதிய விருந்து, இரவு விருந்துகளைத் தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை. சுகாதாரத்துறை, தீயணைப்புத் துறை மட்டுமே உபகரணங்களைக் கொள்முதல் செய்ய அனுமதி . மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி. மேலும் அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்துள்ளது.